சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் பகுதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் தரை இறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு பயணியிடமிருந்த பெட்டியை சோதனை செய்தபோது அதில் தங்கத்தாலான நட்டுகள் மற்றும் போல்ட்டுகள் இருந்தது தெரிய வந்தது. அதனை அறிந்த அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்த போது அவர் சென்னையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

அவர் கொண்டு வந்த 99 போல்ட் மற்றும் நட்டுகள் தங்கத்தால் ஆனவை என்றும் அது தெரியாமல் இருப்பதற்காக அதன் மீது சாம்பல் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றின் மதிப்பு ரூ 85 லட்சம் வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மலேசியாவில் இருந்து தங்கத்தை சென்னைக்கு கடத்தி வந்த பயணியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.