
திண்டுக்கல் மாவட்டம் திருநங்கலத்தைச் சேர்ந்த விஜயபிரகாஷ் (வயது 29), சென்னையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் கரிசல்காளன்பட்டி சேர்ந்த சுபலட்சுமி (வயது 22) என்பவருக்கும் கடந்த மே 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சில தினங்களாகவே இவர்கள் தங்களது பூர்வீக கிராமமான திருமங்கலத்தில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், கடந்த இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிய போது, விடத்தகுளம் – திருமங்கலம் சாலையில், திடீரென ஒரு காரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் விஜயபிரகாஷ் சாலையில் கீழே விழ, அந்தக் குழுவினர் அவரது மனைவி சுபலட்சுமியை வற்புறுத்திக் கடத்தி சென்றனர்.
உடனே விஜயபிரகாஷ், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்தவர் சுபலட்சுமியின் முன்னாள் காதலன் ரமேஷ் (சுங்குராம்பட்டி) எனவும், அவர்தான் கடத்தலுக்கு பின்னணி என்பதும் தெரியவந்தது.
புலனாய்வில் மேலும் வெளியாகிய தகவல்கள் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளன. சுபலட்சுமி மற்றும் ரமேஷ் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் வீட்டார் அந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கட்டாயமாக விஜயபிரகாஷுடன் திருமணம் நடத்தப்பட்டது.
ஆனால் சுபலட்சுமி, முன்னாள் காதலை மறக்க முடியாமல், ரமேஷுடன் மீண்டும் இணைந்து வாழ விரும்பியிருக்கிறார். இதற்காகவே தான் கணவருடன் தனியாக வரும் நேரத்தை ரமேஷிடம் கூறி, கடத்தல் திட்டத்தையும் அவரே வகுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. தற்போது ரமேஷும், சுபலட்சுமியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.