திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ளது.

தற்போது இந்த வழக்கின் விசாரணை கடந்த நேற்று ஜூன் 17ஆம் தேதி திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் விசாரித்து தீர்ப்பு வழங்கினார்.

அந்த வழக்கில் தொடர்புடைய 19 குற்றவாளிகளில் 3 பேர் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே மரணம் அடைந்துள்ளனர். மீதம் இருந்த 16 பேர் மீது விசாரணை நடைபெற்று வந்தது. அதில் 10 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்தக் கொலை குற்றத்தில் ஈடுபட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூபாய் 1000 அபராதம் விதித்து நீதிபதி ராபின்சன் தீர்ப்பளித்தார்.

அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், காந்தி என்ற சிலுவை அந்தோணி (68), கணேசன் (40), சிலம்பரசன் (39), ஜான் பால் (42), வினோத்(42), சஞ்சய்(44), அண்டன்(41), ஜேம்ஸ்(39), மைக்கேல்(43) அந்தோணி மைக்கேல்(39)ஆகியோர் ஆவர்.

மேலும் இந்த வழக்கு குறித்து திறமையாக புலனாய்வு செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வள்ளியூர் உட்கோட்ட டிஎஸ்பி வெங்கடேஷ் மற்றும் வழக்கின் விசாரணையை தீவிரமாக புலனாய்வு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், கூடங்குளம் காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் பாராட்டியுள்ளார்.