
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர், பாலின மாற்றத்துக்குப் பிறகு பெண் வீராங்கனையாக கிரிக்கெட் விளையாட விரும்பி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக மேல்முறையீடு செய்துள்ளார். இதற்கான ஆதாரமாக தனது முழுமையான மருத்துவ சோதனை அறிக்கையையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அனயா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், கடந்த ஜனவரி 20 முதல் மார்ச் 20, 2025 வரையான காலப்பகுதியில், இங்கிலாந்தில் பல்வேறு மருத்துவ மற்றும் உடல் பொது நல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த சோதனைகளின் முக்கிய நோக்கம் – அவர் ஒரு பெண் வீராங்கனையாக சர்வதேச அளவில் விளையாடுவதற்குத் தேவையான உடல் மற்றும் ஹார்மோன்த் தகுதிகளைப் பெற்றுள்ளாரா என்பதை நிரூபிப்பதே என கூறியுள்ளார்.
சோதனை அறிக்கையின் தகவல்படி, அனயாவின் ஹார்மோன்கள், ஹீமோகுளோபின் அளவு, ஆக்ஸிஜன் உறிஞ்சும் திறன், உடல் எடை மற்றும் வலிமை உள்ளிட்ட அனைத்து அளவுகோள்களும் பெண்களுக்கே உரிய தரத்திலிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவரங்களைத் தாங்கிய மருத்துவ அறிக்கையை பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு அனுப்பி, பெண்கள் கிரிக்கெட் அணிக்குள் சேர வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த நடவடிக்கையால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய கேள்விக்குறி எழுந்துள்ளது. பாலின மாற்றம் செய்த நபர் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறக்கூடுமா என்ற விவாதம் மீண்டும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. அனயாவின் துணிச்சலான முயற்சி கிரிக்கெட் நிர்வாகங்களை எந்த முடிவுக்கு இட்டுச் செல்லும் என்பது வருங்காலத்தில் தெரியவரும். இதுதொடர்பாக பிசிசிஐ அல்லது ஐசிசி இன்னும் உரிய பதிலளிக்கவில்லை.