ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கைது செய்யப்பட்ட இரு வாலிபர்களை, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்ததும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்கள், போலீஸாரை மதிக்காமல் தகராறில் ஈடுபட்டு, திடீரென அவர்கள் மீது பாய்ந்து பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த எதிர்பாராத மோதலால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும், ஊழியர்களும் அலறியடித்துக்கொண்டு ஓட, அங்கே பெரும் பதற்றமும், கூச்சலும் குழப்பமும் நிலவியது.

நிலைமை கையை மீறிப் போனதால், உடனடியாக குர்தா டவுன் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு கூடுதல் போலீஸ் படை சம்பவ இடத்திற்கு விரைந்தது. அதன்பின், அராஜகத்தில் ஈடுபட்ட அந்த இருவரையும் போலீஸார் குண்டுகட்டாகத் தூக்கி, தங்களது பாணியில் அடக்கி மீண்டும் காவலில் எடுத்தனர். அரசு மருத்துவமனைக்குள்ளேயே போலீஸாரைத் தாக்கிய இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.