பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவரும், பிரபல இந்திய தொழில் அதிபருமான சஞ்சய் கபூர் (வயது 53), தனது தற்போதைய மனைவி ப்ரியா சச்தேவ் மற்றும் மகன் அசாரியாஸுடன் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தார்.

இவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் 12ஆம் தேதி, லண்டனில் போலோ விளையாட்டு நடந்து கொண்டிருந்தபோது, சஞ்சய் கபூர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆரம்ப தகவலின்படி, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதற்கும் முன் சஞ்சய், “ஏதோ முழுங்கிவிட்டேன்” எனத் தனது நண்பர்களிடம் கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் மருத்துவ பரிசோதனையில், அவரது வாயில் தேனீ பறந்து நுழைந்ததாகவும், அந்த தேனீ தொண்டையில் கொட்டியதால் கடுமையான ஒவ்வாமை எதிர்வினை (Anaphylaxis) ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாரடைப்பு ஏற்பட்டு சுவாசம் தடைபட்டு உயிரிழந்தார் என நிபுணர்கள் கூறுகின்றனர்.  இதைப் பற்றித் தொடர்ந்து விளக்கிய மருத்துவர் பிரவீன் கஹாலே, “தேனீ வாயில் அல்லது தொண்டையில் கொட்டினால், அந்த விஷம் இரத்த ஓட்டத்தில் கலந்து, காற்றுப்பாதை வீங்கி, ரத்த அழுத்தம் குறைந்து, சுவாசம் தடைபட்டு மாரடைப்பை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்.