
உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், புதிதாக திருமணமான பெண் ஒருவர் தனது கணவரும், மாமனாரும், மைத்துனியும் இணைந்து தன்னை வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் பிங்கி சரோஜ் (24). இவருக்கு மே 5, 2024 அன்று சாவன் சவுத்ரியுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமான இரண்டு நாட்களுக்குள் அவருக்கு ₹50,000 பணம், டிவி, ஏசி மற்றும் வாஷிங் மெஷின் ஆகியவற்றை பெற்றோரிடமிருந்து வாங்கி வருமாறு கணவனின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
பிங்கி அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் சிகரெட்டுகளால் தன்னுடைய உடலை எரித்து கொடுமைப்படுத்தியதுடன், உடல் உறவையும் தவிர்த்து வந்ததாகக் கூறியுள்ளார். மேலும், அவரது மாமனார் லலித் நாராயண் சவுத்ரியும் மைத்துனி ஆர்த்தியும் அடிக்கடி தாக்கி மனதளவில் மிகவும் கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கோபிகஞ்ச் பெண்கள் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிமன்யு மங்லிக், இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விரைவில் கைது செய்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.