திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே சேனாதிபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சாமியாத்தாள். இவர்களுக்கு அபிநயா என்ற மகள், வித்யாசாகர் என்ற மகன் உள்ளனர். அதில் மகள் அபிநயா திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறார்.

மகன் வித்யாசாகர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேறு சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஜூன் 11ஆம் தேதி காலை சாமியாத்தாளும், வேலுச்சாமியும் சேர்ந்து காட்டுப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றுள்ளனர்.

அப்போது வித்யாசாகர் பெற்றோர்களை காலை உணவு சாப்பிட அழைப்பதற்காக செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் இருவரும் போனை எடுக்காததால் நேரில் சென்று அழைத்து வர காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது பெற்றோர் இருவரும் கல்லால் அடித்த ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வித்யாசாகர் பெற்றோரின் உடலை பார்த்து அங்கேயே கதறி அழுதுள்ளார். இதுகுறித்து அறிந்த வெள்ளகோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் சாமியாத்தாளின் கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இருவரின் வாயிலும் தென்னைமரத்திற்கு பயன்படுத்தக்கூடிய செல்பாஸ் மாத்திரை இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு மேய்க்கச் சென்ற தம்பதியினர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.