ஆந்திரப் பிரதேசத்தில், தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கான ஒரே நாளில் 10 மணி நேர வேலை நேரம் கட்டாயமாகும் வகையில் தொழிலாளர் சட்ட திருத்தம் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னதாக, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9 மணி நேர வேலை அனுமதிக்கப்பட்டது. இப்போது 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 5 மணி நேர வேலைக்கு 1 மணி நேர ஓய்வு அளிக்கும் பிரிவு 55 இப்போது 6 மணிக்கு 1 மணி நேர ஓய்வாக மாற்றப்பட்டுள்ளது.

ஓவர்டைம் நேரம் காலாண்டுக்கு 75 மணி நேரத்திலிருந்து 144 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொழில்துறை வளர்ச்சி பெறும்; பெண்களும் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் பணியாற்றும் வகையில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்” என்றார்.

இந்த முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே. ராமகிருஷ்ணா கூறுகையில், “தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் விதமாக, இந்த புதிய சட்டம் அமைகிறது. கடந்த 11 ஆண்டுகளாக மோடி அரசு தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூலை 9ஆம் தேதி நாடுமுழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன” என்று தெரிவித்தார். தொழிற்சங்கங்கள் இந்த புதிய திட்டத்தை தொழிலாளர்களை சுரண்டும் முயற்சி என்றும், தங்கள் உரிமைக்காக போராடத் தயார் என்றும் வலியுறுத்துகின்றனர்.