தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சீரியல் மாவட்டம் சந்திரவெல்லி மண்டல மையத்தில் நடைபெற்ற பூபாரதி மாநாட்டில், விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் இடையே கடும் சண்டை மற்றும் தாக்குதல் ஏற்பட்டது. அதாவது நிலம் தொடர்பான வாக்குவாதத்தில் ராஜு மற்றும் ரமேஷ் என்ற விவசாயிகள் தகராறில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் முயன்றபோது, விவசாயிகள் அதிகாரிகளை செருப்பால் தாக்கியுள்ளனர். இந்தக் காட்சிகள்  இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

வீடியோவில், ஒருவர் மற்றொருவரை செருப்பால் தாக்குவது, பின்னர் சமையல் பாத்திரம் கொண்டு தாக்குவது போன்ற அதிர்ச்சி காட்சிகள் பதிவாகியுள்ளன.

சண்டை மேலும் வெடிக்காதபடி மையத்தின் கதவுகளை அதிகாரிகள் மூடினர். இந்த சம்பவம் நிகழ்ந்தது பூபாரதி மாநாட்டின் அமைதியான பரிமாற்ற சூழலை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருக்கிறது.

இதற்கும் முந்தையதாக, நிர்மல் மாவட்டம் கானாப்பூர் மண்டலத்தில் நடைபெற்ற மற்றொரு பூபாரதி மாநாட்டில், மூத்த விவசாயி அல்லேப்பு வெங்கட்டை, உதவி சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்தர் அவரது கையைப் பிடித்து இழுத்து வெளியேற்றும் வீடியோ வெளியாகியது.

விவசாயி, நிலம் குறித்த புகாருடன் வந்த நிலையில், தாசில்தாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், போலீசாரை அழைத்து வெளியே அனுப்பினார். இது தொடர்பாக பெரும் கண்டனம் எழுந்து, அந்த போலீசாருக்கு இடைநீக்கம் வழங்கப்பட்டது. இந்த 2 சம்பவங்களும் விவசாயி நலன் மற்றும் அதிகாரிகள் நடத்தைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளன.