
பெரம்பலூர் மாவட்டம் வசிஷ்டகுடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவருக்கு 12 வயது மகன் தனுஷ் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அவரது மனைவி நீலா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து, மகன் தாயார் வழி தாத்தா பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
வெங்கடேசன் தற்போது வசிஷ்டகுடியில் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், வெங்கடேசனின் தம்பி பெருமாள் (வயது 33), குடும்பத்துக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை விற்க விரும்பி, அண்ணனிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, ஆவணத்தில் கையெழுத்து பெற முயற்சி செய்தார்.
ஆனால் வெங்கடேசன் பல நாட்கள் கழிந்தும் கையெழுத்திட மறுத்து தம்பியைத் தொடர்ந்து அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கோபத்தில், பெருமாள் வெங்கடேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் மோசமாக மாறிய போது, வெங்கடேசன் அரிவாளால் பெருமாளின் கை, கால், கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டினார்.
அருகிலுள்ளவர்கள் விரைந்து பெருமாளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பலத்த காயங்களால் சிகிச்சை பலனின்றி பெருமாள் உயிரிழந்தார். இருவரின் தந்தையான ஆதிமூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்ட நிலையில், தாயார் கருத்தமணி தான் இருவரையும் வளர்த்துப் பெரிய ஆட்களாக ஆக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த சோகமான சம்பவம் வசிஷ்டகுடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.