தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று முதல் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்குச் செல்ல, ஆசிரியர்களும் இனிப்புகள், பூங்கொத்துகளுடன் வரவேற்பளித்தனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டம் குறித்து தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் தமிழ்மொழி திறனாய்வு தேர்வு மற்றும் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவர்கள் மாதம் ரூ.1,000 வீதம், ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000 வரையிலும் பெறலாம். இந்தத் தேர்வு முழுமையாக இடஒதுக்கீடு முறையில் நடத்தப்படுகிறது. 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என மொத்தம் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு தாள்களாக, ஒவ்வொன்றிலும் 60 வினாக்களுடன் நடத்தப்படும்.

இதே போல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் தமிழ்மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். முக்கியமாக, இந்தத் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களோடு தனியார் பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேர்வுக் கட்டணமாக ரூ.50 சேர்த்து தங்கள் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கலாம். தேர்வுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் இத்திட்டம், மாநிலத்தில் பள்ளிக்கல்வியை ஊக்குவிக்கவும், மாணவர்களின் திறன்களை அடையாளம் காணவும் உதவுகின்ற முக்கிய முயற்சியாகும்.