
மராட்டியத்தில் துலே மாவட்டத்தில் திபாபாய் பவரா(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவ்லேஷ்(25) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திபாபாய் நேற்று மீன் குழம்பு சமைத்து வைத்துவிட்டு உறங்கியுள்ளார். ஆனால் வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய் சமையலறையில் இருந்த மீன் குழம்பு, சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு சென்றுள்ளது.
இந்நிலையில் வேலைக்கு சென்ற மகன் குடி போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். சமையலறைக்கு சென்று பார்த்தபோது அங்கு எதுவும் இல்லை. இதனால் அவர் உறங்கிக் கொண்டிருந்த தனது தாயாரை எழுப்பி உணவு சமைக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து திபாபாய் சமைக்க மறுத்துவிட்டார். மேலும் ஒரு உறக்கத்தில் இருந்ததால் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவ்லேஷ் குடிபோதையில் வீட்டிலிருந்த கட்டையால் தாயாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த திபாபாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மதுபோதையில் அவ்லேஷ் தாயார் அருகிலேயே படுத்து உறங்கி உள்ளார். இன்று காலை மது போதை தெளிந்த பிறகு தனது தாயை தானே அடித்து கொன்றதை அவர் உணர்ந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் அவ்லேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.