உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணத்தின் போது நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாரபங்கி மாவட்டத்தில் லவ்லேஷ் என்ற வாலிபருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இவர்களுக்கான திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்த நிலையில் திருமண ஊர்வலமும் தயார் நிலையில் இருந்தது.

அப்போது திடீரென மணமகன் திருமண ஊர்வலத்தில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்தார். திருமண கனவுகளோடு கையில் மெஹந்தி போட்டு ஆசையோடு காத்திருந்த மணமகள் இதனால் அதிர்ச்சி அடைந்த நிலையில் மணமகன் ஒரு அப்பாச்சி பைக் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பணம் கொடுத்தால்தான் திருமண ஊர்வலத்திற்கு வருவேன் என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் லட்சுமியின் குடும்பத்தில் மொத்தம் 3 பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் லட்சுமி இளைய மகளாவார். இவ்வளவு பெரிய வரதட்சணையை அந்தப் பெண்ணின் குடும்பத்தினரால் கொடுக்க முடியாத நிலையில் அவர்கள் மணமகனிடம் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவரோ பணம் மற்றும் பைக் கொடுத்தால்தான் திருமணத்திற்கு வருவேன் என்று கூறிவிட்டார்.

இதனால் பல கனவுகளோடு அரங்கேறிய திருமண விழா நின்றுவிட்டது. மேலும் இந்த சம்பவத்திற்கு லட்சுமியின் உறவினர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் போலீசார் தலையிட்டும் இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மணமகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட லட்சுமிக்கு கண்டிப்பாக நீதி வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்