ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்வாரியம் பரிசீலனை செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித கட்டண உயர்வும் கிடையாது. தற்போதுள்ள அனைத்து சலுகைகளும் தொடரும். கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளி வருகிறது.

தற்போது மின்கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை. எனினும் ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும் போது அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும் தற்போது வழங்கப்படும் அனைத்து இலவசம் மின்சார சலுகைகளும் தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.