
தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.digilocker.gov.in, www.tnresults.nic in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் மொத்தமாக 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவிகள் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் வழக்கமாக மாணவர்களை விட மாணவிகள் தான் இந்த வருடமும் தேர்ச்சி அதிகமாக பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கோவிலாம்பூண்டி பகுதியை சேர்ந்த கோதண்டராமன்(70) என்பவர் கடந்த 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். ஆனால் அந்த தேர்வுகளில் தோல்வியை சந்தித்தார். இருப்பினும் மனம் தளராமல் இந்த ஆண்டு மீண்டும் தேர்வை எழுதிய கோதண்டராமன் 500க்கு 299 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார்.