பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதன் விசாரணை முடிந்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசிக சார்பில் கோயம்புத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக திருமாவளவன் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு சென்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை நான் வரவேற்கிறேன். சரியான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு என்னுடைய நன்றி. இது போன்ற பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு ஆபாச இணையதளங்களும் முக்கியமான காரணம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதனால் ஆபாச இணையதளங்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.