யோகா குருவும், பத்மஸ்ரீ விருதாளருமான சிவானந்த் பாபா (வயது 128) நேற்று (சனிக்கிழமை) இரவு வாரணாசியில் காலமானார். கடந்த மூன்று நாட்களாக உடல்நலக்குறைவால் வாரணாசி பிஎச்யூ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இரவு 8.30 மணிக்கு உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது உடல் இரவு தாமதமாக துர்காகுண்ட் பகுதியில் உள்ள அவரது ஆசிரமத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹரிச்சந்திர காட்டில் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அவரது ஆசிரமத் தலைவர் மற்றும் சீடர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவானந்த் பாபா 2022-ம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி, ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். வெள்ளை வேட்டி மற்றும் குர்தா அணிந்து வந்த அவரை, பிரதமர் மோடியே எழுந்து நின்று கூப்பிய கைகளால் தலை வணங்கினார். அவர் கடந்த சில ஆண்டுகளில் யோகா மற்றும் சாந்த வாழ்க்கை முறையை பரப்பியதற்காக பெரும் மதிப்பை பெற்றிருந்தார்.