புதுக்கோட்டை மாவட்டம் மணப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் சுமையா பானு – நாகசுந்தரம் தம்பதியினர். சுமையா பானு மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் நாகசுந்தரம் திருமயம்பாய்லர் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 28-ம் தேதி தம்பதியினர் இருவரும் வீட்டின் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து மூன்று மர்ம நபர்கள் கதவை உடைத்து கொண்டு வீட்டினுள் நுழைந்தனர்.சத்தம் கேட்டு தம்பதியினர் இருவரும் விழித்து பார்த்த போது முன்று மர்ம நபர்கள் முகத்தை மூடிய படி சட்டை அணியாமல் கைலியுடன் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பதியினர் உதவிக்கு யாரையாவது அழைக்க முயற்சித்த போது அந்த நபர்கள் கையில் வைத்திருந்த கம்பியால் நாகசுந்தரத்தின் தலையில் தாக்கினர். சப்-இன்ஸ்பெக்டரை ஆயுதங்களை காட்டி மிரட்டி தரையில் அமர வைத்தனர்.

பின்பு தம்பதியினர் அணிந்திருந்த தங்க சங்கிலி மோதிரம் போன்றவைகளை மிரட்டி வாங்கிக்கொண்டு வீட்டில் வேறு ஏதும் நகை பணம் உள்ளதா என கேட்டு மிரட்டினர். அதன் பின்பு வீட்டின் பின்பக்கம் உள்ள தைல மரக்காடு வழியாக தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து திருகோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த நாகசுந்தரத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்பு சுமைனா பானுவிடம் விசாரணை நடத்தியதில் மர்ம நபர்கள் மூவரும் வீட்டிற்கு பின்பக்கம் உள்ள தைல மரக்காடு வழியாக தப்பி சென்றது தெரியவந்தது.

அதனால் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்ட்டது. இது குறித்து அறிந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டார். இதனையடுத்து தனிப்படையினர் தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.