அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் உடனடியாக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. அதாவது அமைச்சராக இருப்பதால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதாக கூறி அவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது. அதே நேரத்தில் அவர் உடனடியாக அமைச்சர் பதவியில் பொறுப்பேற்றதால் அதனையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க முடியாது என்று எப்படி கூற முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது சட்டப்படி ஜாமின் பெற்ற பிறகு தான் அமைச்சராக பொறுப்பேற்றதாக செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.

அதன்பிறகு பேசிய நீதிபதிகள் செந்தில் பாலாஜி அமைச்சராகவும் இருந்தபோது சமரசம் செய்த விதம் குறித்து கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அந்த கோரிக்கையை நீதிமன்றம் ரத்து செய்தது.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள் நாங்கள் மெரிட் அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கவில்லை. அரசியல் சாசன பிரிவை மீறியதன் காரணமாகவே ஜாமின் வழங்கப்பட்டது. எனவே செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா இல்லை எனில் ஜாமீன் வேண்டுமா என்பதை அவர் முடிவு செய்ய வேண்டும். மேலும் இரண்டில் ஒன்றில் தான் தொடர முடியும் என்பதால் திங்கட்கிழமை இது குறித்து பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் நீதி மன்றத்தின் இந்த உத்தரவால் செந்தில் பாலாஜி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.