பெங்களூருவில் தெருநாயின் தனிப்பட்ட உறுப்புகளை வெட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த  தொழிலாளி நிதிஷ் குமார் (30) என்பவர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயநகர் 5-வது ப்ளாக், ஷாலினி மைதானத்தில் மார்ச் 14 அன்று விலங்குகள் நல ஆர்வலர் வித்யாராணி தெருநாய்களுக்கு உணவு வழங்கச் சென்றபோது, ஒரு ஆண் நாய் இரத்தம் கொட்டும் நிலையில் கிடப்பதையும், அதே நேரத்தில் இருவர் ஓடிப் போவதையும் கவனித்தார். இதைத்தொடர்ந்து, அவர் போலீசில் புகார் அளித்த நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு மற்றொருவரை தேடி வருகின்றனர்.

விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீசார், விலங்குகளுக்கு கொடுமை செய்யும் சட்டத்தின் (Prevention of Cruelty to Animals Act) 11 (a) பிரிவின் கீழும், பாரதீய ந்யாய ஸன்ஹிதா (BNS) 325 பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாய்களுக்கு இப்படியான கொடுமை நிகழ்வதை கண்டிப்பதற்காக, விலங்கு நல அமைப்புகள் மேலும் கடுமையான நடவடிக்கைகளை கோரியுள்ளன. அந்த குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படி விலங்குகளுக்கு மிருகத்தனமான கொடுமை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பதைக் காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.