பிரபல இசையமைப்பாளரான இளையராஜா மார்ச் 8-ஆம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள்.

தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன். அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தெரு என அவர் வசித்த தெருவுக்கு அண்மையில் பெயர் வைத்தேன். அவர் பாடிய பாடல்கள் கேசட் ஒன்று கொடுத்தார்கள். அதில் பெரும்பாலும் உங்களுடைய பாடல்கள் தான். அதைத்தான் காரில் போகும் போதெல்லாம் கேட்டுட்டு இருக்கேன் என முதலமைச்சர் இசைஞானி இளையராஜாவிடம் கூறியுள்ளார்.