உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள எஸ்ஜி கிராண்ட் சொசைட்டியில் நடந்த ஒரு விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் நடந்தது. அதாவது ஐந்தரை வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற ஒரு கார் குழந்தையின் மீது ஏறி இறங்கியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த விபத்தை ஏற்படுத்தியவர் பெயர் சந்தியா என்பது தெரியவந்துள்ளது.

அவர் விபத்து ஏற்பட்டதும் காரை நிறுத்தி முதலில் குழந்தையை பார்த்தார். ஆனால் குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஓட்டுனரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்த நிலையில் ஐந்தரை வயது சிறுவனின் வலது கால் முறிந்ததோடு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது போலீசார் சந்தியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.