பெல்ஃபாஸ்ட்டில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது, இந்திய அணி தேசிய கீதம் பாடிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. வழக்கமாக சர்வதேச போட்டிகளில் ஒவ்வொரு வீரரின் முன்னாலும் ஒரு குழந்தை மாஸ்காட் நிற்பது வழக்கம். ஆனால், இந்த போட்டியில் இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் ஆகிய இருவருக்கு முன்னாலும் எந்த குழந்தையும் நிற்கவில்லை.
இதை கவனித்த ரசிகர்கள், 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இன்னும் ஒரு குழந்தை என்பதால் தான் அவருக்கு முன்னால் மாஸ்காட் வைக்கப்படவில்லை என்று சோசியல் மீடியாவில் மீம்ஸ்களை பறக்கவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். எனினும், இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
மற்றொரு புறம், இந்த போட்டியில் இந்திய அணி அயர்லாந்திடம் 34 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 182 ரன்கள் குவிக்க, அடுத்து களமிறங்கிய இந்திய அணி அபிஷேக் சர்மாவின் அதிரடி அரைசதத்தையும் தாண்டி 148 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே அயர்லாந்து அணியிடம் இந்தியா தோற்பது இதுவே முதல் முறையாகும்.
During the national anthem, no child was standing in front of Vaibhav Suryavanshi because he is still a child himself. There was also no child standing in front of Prince Yadav, probably because there weren’t enough children available ig. pic.twitter.com/r8jFV56UxO
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) June 27, 2026
கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே ஸ்ரேயாஸ் ஐயர் வரலாற்று தோல்வியை சந்தித்திருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் 2வது டி20 போட்டியில் இந்திய அணி பலமான கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
