திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் தாலுகா பெரியபாலியபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் ராமு. இவருக்கு விஜயகுமார்(29) என்ற மகன் இருந்துள்ளார். விஜயகுமார் சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு வலது கை, கால்கள் சற்று ஊனக் குறைபாடு உள்ளவர். இந்த நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தாருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி வழக்கம் போல திருமணம் செய்து வைக்க வேண்டும் என குடும்பத்தாருடன் தகராறில் ஈடுபட்ட விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டி உள்ளார். அதன்படி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்த தீ விபத்தில் பலத்த காயம் அடைந்த விஜயகுமாரை அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்க சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு  தீவிர சிகிச்சை பிரிவில் அமைதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மேற்கு காவல் துறை வழக்குப்பதிவு செய்து குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகிறது. திருமணம் செய்து வைக்கக் கோரி இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.