
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு லிங்க் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பி அதனை கிளிக் செய்வதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை அபேஸ் செய்கிறார்கள். இதேபோன்று செல்போனுக்கு மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு டிஜிட்டல் அரெஸ்ட், பகுதி நேர வேலை என்றெல்லாம் கூறி பணத்தை ஏமாற்றி பறிக்கிறார்கள். இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் சைபர் கிரைம் போலீசாரும் இது போன்ற மோசடி வேலைகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அந்த வகையில் இன்று புத்தாண்டை முன்னிட்டு புத்தாண்டு வாழ்த்து பதிவு அனுப்புவது போன்று சைபர் குற்றவாளிகள் மோசடி வேலைகளில் ஈடுபடுவதாக தற்போது கன்னியாகுமரி, மற்றும் திருநெல்வேலி மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.
அதாவது புத்தாண்டு வாழ்த்து குறிப்பு போன்ற whatsapp-க்கு apk file அனுப்புவார்கள். அல்லது லிங்க் அனுப்புவார்கள். இதனை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பலாம் என்று எழுதப்பட்டிருக்கும். நீங்கள் இந்த லிங்கை கிளிக் செய்தால் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அபேஸ் செய்து விடுவார்கள். எனவே முன்பின் தெரியாத நபர்களில் இருந்து இதுபோன்று லிங்க் ஏதேனும் வந்தால் அதனை கிளிக் செய்யக்கூடாது. அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும். மேலும் இதனால் நீங்கள் பாதிக்கப்பட்டால் 1930 என்ற நம்பரிலோ அல்லது cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலோ, புகார் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.