
சென்னையை சேர்ந்த பொன்னி என்பவருக்கும் குடியாத்தத்தை சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பொன்னிக்கும் நவீன் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவி இருவரும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் குடியாத்தம் பகுதியில் இருக்கும் சொந்த வீட்டிற்கு வந்தனர். அப்போது நவீன் குடும்பத்தினர் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய போவதாக தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த பொன்னி தனது குடும்பத்தினருடன் குடியாத்தம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.
போலீசார் வந்து விசாரித்த போது, நாங்கள் ஊரில் இருந்து வந்த உடனே நவீன் குடும்பத்தினர் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதாக கூறினர். இரவு முழுவதும் என்னை அடித்து சித்திரவதை செய்தனர். என் கணவரை பார்க்க அனுமதிக்கவில்லை. எனக்கு நியாயம் வேண்டும் என கூறினார். போலீசார் பொன்னியையும் நவீனையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது நவீன் தனக்கு இரண்டாவது திருமணம் நடத்தி வைப்பதாக கூறுவது முற்றிலும் பொய் என கூறினார். அதன் பிறகு போலீசார் கணவன் மனைவி இருவரையும் சமாதானப்படுத்தி எழுதி வாங்கிக்கொண்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.