உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவப் பணியைச் செய்ய வேண்டிய பாதுகாப்புக் காவலர் ஒருவர் ஊசியில் மருந்து ஏற்றிய விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டா செக்டார் 39-ல் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், அங்கிருந்த காவலாளி ஒருவர் சிரிஞ்சில் மருந்தை உறிஞ்சி நிரப்பும் பகீர் காட்சி இணையத்தில் தீயாய் பரவியது. அப்போது அங்கு மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் அருகில் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது மக்களை மேலும் கொதிப்படையச் செய்தது. இந்தச் சம்பவம் கடுமையான விவாதத்தைக் கிளப்பியதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் உடனடியாகத் தீவிர விசாரணையைத் தொடங்கியது. விசாரணையின் முடிவில், விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அந்தப் பாதுகாப்புக் காவலர் மற்றும் தொடர்புடைய செவிலியர் ஆகிய இருவரையும் உடனடியாகப் பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்குள் எந்தவொரு மருத்துவப் பணியையும் தகுதியற்ற மற்றும் மருத்துவப் பயிற்சி பெறாத பணியாளர்கள் மேற்கொள்வது நோயாளிகளின் உயிருக்கு எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்ற கடுமையானக் கேள்விகளை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.

“>

 

மருத்துவமனைகளில் முறையான நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், இதுபோன்ற அத்துமீறல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும் உயர் அதிகாரிகள் முழுக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.