
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. இவர் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் நிருபர்கள் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் அதற்கு பதில் வழங்கினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஒருபோதும் சர்வாதிகாரிகளுக்கு இடம் கிடையாது. ஒருவேளை அப்படி யாராவது சொன்னால் அவர்களுக்கு கண்டிப்பாக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார். அதாவது சீமான் ஒரு நேர்மையானவர் சர்வாதிகாரியாக தான் இருக்க முடியும். எம்ஜிஆர் மற்றும் நேரு போன்ற தலைவர்கள் கூட அன்பான சர்வாதிகாரியாக இருந்துள்ளனர். நான் இப்படித்தான் இருப்பேன். கட்சி விதிகளுக்கு உட்படவில்லை எனில் அவர்கள் கட்சியை விட்டு தாராளமாக விலகி செல்லலாம் என்று முன்னதாக கூறியிருந்தார்.
இப்படி சீமான் கூறிய நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் ஒருபோதும் சர்வாதிகாரிகள் ஆட்சிக்கு வர முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் பற்றிய கேள்விக்கு, எம்ஜிஆர் பாணியை நடிகர் விஜய் பின்பற்றுகிறார். அது ஒருபோதும் நடக்காது. கண்டிப்பாக அனைவராலும் எம்ஜிஆர் ஆக முடியாது. திமுக மீது விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பிசுபிசுத்து போகும் என்றார். முன்னதாக விஜய் தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி வரும் என்றும் குடும்ப ஆட்சி செய்து ஊழல் செய்யும் திமுக ஆட்சியை மக்கள் ஆட்சியில் இருந்து தூக்கி எறிவார்கள் என்றும் கூறியிருந்தார்.
மேலும் திமுக அரசை தன் முதல் எதிரி என்று விஜய் அறிவித்ததோடு செயற்குழு கூட்டத்தில் கூட திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியதோடு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் இனியாவது ஆட்சியாளர்கள் விழித்துக் கொண்டு பொதுமக்கள் பயத்தை போக்கி சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்திலும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் திமுகவை விஜய் விமர்சிக்கும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் அமைச்சர் ரகுபதி விஜயால் எம்ஜிஆர் ஆக முடியாது என்று கூறியுள்ளார்.