
இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மதியம் 12 மணிக்கு மேல் மக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது. வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பகல் 11 மணி முதல் மதியம் மூன்று மணி வரை வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.