
தற்போதைய காலகட்டத்தில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் ஃபோன்களின் மூலமாக எண்ணற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து நமது அன்றாட வேலைகளை மிகவும் எளிதாக செய்து வருகிறோம். ஒருபுறம் இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாக இருந்தாலும் மற்றொருபுறம் இதனால் குற்றங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை கொண்டு மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் பலர் தனிநபரின் வங்கி சார்ந்த தரவுகளை திருடி அதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களது பணத்தை கையாடல் செய்து விடுகின்றனர். இது குறித்த புகார்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால் பேசியபோது, youtube வீடியோ மூலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் இரண்டு வகையான சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது. அதாவது youtube வீடியோகளுக்கு லைக் செய்ய வைத்து அதன் மூலமாக பகுதி நேர வேலை வாய்ப்பு மற்றும் பணம் கிடைக்கும் என கூறி மக்களிடம் பணத்தை கட்ட தூண்டுகின்றார்கள். அதேபோல் இணையதளம் மூலமாக கட்டிய பணம் பயனர்களுக்கு திரும்ப கிடைப்பதில்லை. அதனால் பொதுமக்கள் எந்தவித இணையதளத்திலும் பணத்தைக் கட்டி ஏமாற வேண்டாம். மேலும் ஆதார் கார்டு, பான் கார்டு பற்றிய விவரங்களையும் பதிவிட வேண்டாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.