ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் வழங்கப்பட்டு வரும்  அரசாணை படி சிறப்பு பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு பிரத்யேக நீல நிற வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 767 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைக்கான அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் தற்போது வரை 4 ஆயிரத்து 348 மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும், 2 மாதங்களுக்கு ஒருமுறை 2-வது செவ்வாய்க்கிழமை கூடுதல் கலெக்டர் முன்னிலையிலும் இவர்களுக்கான குறைகளை தீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து வருகிற 10-ந் தேதி வரை  இவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளதால், இதனை பயன்படுத்தி நீலநிற வேலை அட்டையினை பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.