கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம்பல்பட்டி அம்பேத்கர் நகரில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வேள்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு சித்தார்த் என்ற 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் மோட்டார்  சைக்கிளில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் ஜண்டாமேடு பகுதியில் சென்ற போது ஓசூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் சித்தார்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதனையடுத்து படுகாயமடைந்த முரளி, வேள்வி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.