சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பெகட்ரான் நிறுவனத்துடன் ரூ 1000 கோடிக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. 1000 கோடியில் மின்னணு பொருள் உற்பத்தி ஆலை மூலம் 8000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் கிருஷ்ணகிரியில் உள்ள தனது மின் ஆலையை ரூபாய் 12,082 கோடியில் விரிவாக்கம் செய்கிறது டாடா நிறுவனம். டாடா நிறுவன உற்பத்தி ஆலை விரிவாக்கத்தின் மூலம் 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ரூபாய் 6,180 கோடியில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. காஞ்சிபுரத்தில் பெட்ரோலிய, மின்சார வாகன கார், பேட்டரி தயாரிப்பு நிலையத்தை ஹூண்டாய் நிறுவுகிறது. சென்னை ஐஐடியுடன் இணைந்து ஹைட்ரஜன் எரிபொருள் புத்தாக மையத்தையும் ஹூண்டாய் அமைக்க உள்ளது.