ஏமன் நாட்டில் ‘காத்’ எனப்படும் ஒருவகை போதை தரும் இலைகளை மெல்லும் பழக்கம் தீவிரமாகப் பரவி, ஒட்டுமொத்த நாட்டையே பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.

மேலும் அங்கு 8 வயது சிறுவர்கள் முதல் 80 வயது முதியவர்கள் வரை பலரும் இந்த இலைகளை மணிக்கணக்கில் வாயில் போட்டு மென்று கொண்டே இருக்கிறார்கள். ஆடுகளைப் போலத் தொடர்ந்து பல மணி நேரம் இந்த இலைகளை வாயில் ஒதுக்கிச் சவைப்பதால், அவர்களின் கன்னங்கள் வீங்கிப் போய் விடுகின்றன.

“>

இந்த விசித்திரமான மற்றும் அடிமையாக்கும் போதைப் பழக்கம் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தைக் கெடுப்பதுடன், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சீரழித்து வருகிறது. தற்போது ஆண்களைத் தாண்டி பெண்களும் இந்த ‘காத்’ இலைகளை அதிகளவில் மெல்லத் தொடங்கியுள்ளதால், அங்கு குடும்ப வன்முறைகள், கடுமையான நிதி நெருக்கடி மற்றும் குழந்தைகளைப் புறக்கணித்தல் போன்ற சமூகப் பிரச்சினைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

இந்த இலைகளைத் தொடர்ந்து நீண்ட நேரம் மென்று வருவதால் வாய், தொண்டை மற்றும் வயிற்றுப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், இது மனிதர்களின் இதயத்துடிப்பை மிக வேகமாக்குவதுடன், உயர் இரத்த அழுத்தம், கடுமையான தூக்கமின்மை மற்றும் குழந்தைகளின் இயல்பான உடல் வளர்ச்சியைப் பாதிப்பது போன்ற பல்வேறு ஆரோக்கியக் குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது.