மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில், 60 வயது வேதியியல் ஓய்வுபெற்ற பேராசிரியையான மம்தா பாதக் என்பவர், தனது கணவரை மின் அதிர்வுகள் மூலம் கொன்றதாக குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. கணவர் நீரஜ் பாதக் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஆவர்.

 

போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சார்ஜ்ஷீட்டில், மம்தா பாதக், கணவருக்கு அதிக அளவு தூக்கமருந்து கொடுத்து வலியில்லாமல் தனது கணவர் மீது மின்சாரம் விட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று நடந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கின் விசாரணையின் போது, நீதிபதி விவேக் அகர்வால், “மின் அதிர்வுகள் மூலம் கொலை செய்யப்பட்டதாக பரிசோதனை கூறுகிறது. அதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என மம்தா பாதக்கிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த மம்தா மிக தெளிவாக, “மின்சாரம் பாயும் போது உலோக அணுக்கள் திசுக்களில் படிந்து விடும்.

ஆனால் பரிசோதனை அறையில் thermal burn மற்றும் electric burn-ஐ வேறுபடுத்த முடிவதில்லை” என அறிவியல் விளக்கம் அளித்தார். இதைக் கேட்ட நீதிபதி ஆச்சரியத்தில் மிதந்துவிட்டார். “நீங்கள் வேதியியல் பேராசிரியரா?” என கேட்டபோது, “ஆம்” என பதிலளித்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும், “இது ஹாலிவுட் அல்லது பாலிவுட் படத்துல இருந்து எடுத்த சீன் மாதிரி இருக்கு”, “அவர் குற்றவாளியா இல்லையா தெரியல, ஆனா விளக்கம் சரியாக-ஆ இருக்கு” எனக் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சிலர், “ஒரு பெண் தன்னை நீதிமன்றத்தில் இப்படிச் சுயமாக, அறிவியல் ஆதாரங்களுடன் காப்பாற்றுகிறார் என்பதே கல்வியின் சக்தி” என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், குற்றவாளி யார் என்பதற்கான இறுதி முடிவு நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே அமையும்.