மகாராஷ்டிர மாநிலம் பீடு மாவட்டத்தில் உள்ள புருஷோத்தமபுரி பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில், பக்தர்கள் பயணித்த படகு ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புனித யாத்திரையை முன்னிட்டு அங்குள்ள புகழ்பெற்ற பகவான் புருஷோத்தமர் கோயிலுக்குச் செல்வதற்காக, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் அந்தப் படகில் பயணித்துள்ளனர்.

மேலும் படகின் கொள்ளளவை விட அதிகமான அளவில் பயணிகளை ஏற்றியதே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் என்று தப்பியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆற்றின் நடுவே சென்றபோது நிலைதடுமாறிய படகு திடீரென தலைகீழாகக் கவிழ்ந்ததால், அதிலிருந்த பயணிகள் அனைவரும் தண்ணீரில் மூழ்கி அலறினர்.

“>

இந்தத் திடுக்கிடும் சம்பவத்தைக் கண்டதும், ஆற்றின் கரையில் இருந்த உள்ளூர் மக்களும் மீனவர்களும் உடனடியாக ஆற்றில் குதித்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய பலரை அவர்கள் பாதுகாப்பாக மீட்டு கரை சேர்த்த போதிலும், துரதிர்ஷ்டவசமாக இரண்டு பெண் பக்தர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு சிறுவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளதாகத் தெரிகிறது.

இச்சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் நிர்வாகமும் பேரிடர் மீட்புக் குழுவினரும், காணாமல் போனவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அத்துடன், முறையான பாதுகாப்பு உபகரணங்களோ, லைஃப் ஜாக்கெட்டுகளோ இன்றி பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.