குடியரசு தினம் மற்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அடுத்து வரும் ஆறு நாட்களில் ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வுதியங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 28ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் மற்றும் அடுத்த நாள் ஜனவரி 29ஆம் தேதி ஞாயிறு பொது விடுமுறை என்பதால் ஜனவரி 28 முதல் 31ம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கிகள் இயங்காது. இதேபோல் குடியரசு தினம் அரசு விடுமுறை என்பதால் இன்றும் வங்கிகள் இயங்காது.

இதனால் வரும் 6 நாட்களில் 5 நாட்களில் வங்கிகள் இயங்காமல் இருக்கும். இதனிடையே மும்பையில் வங்கி வேலை நிறுத்தம் தொடர்பாக துணை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த சமரசமும் ஏற்படவில்லை. இதை அடுத்து சமரச கூட்டம் ஜனவரி 27ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் தொடர்ந்து இயங்காது என்பதால் பொதுமக்கள் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது மற்றும் பணம் கையிருப்பை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.