தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் கிராமத்தில் சிவபெருமாள்- செல்வகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 2-வது மகன் அஜய்குமார் அப்பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 2-ஆம் தேதி அஜய்குமார் உள்ளிட்ட சில மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென அஜய்குமார் கீழே விழுந்ததாக தெரிகிறது. இதனால் படுகாயமடைந்த சிறுவனை திருநெல்வேலியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்நிலையில் அஜய்குமாரின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்து, மாணவனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கலெக்டர் உறுதி அளித்தார். அதன் பிறகு சிறுவனின் உடலை பெற்றோர் பெற்று சென்றனர். நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி பரிமளம், பள்ளியின் தலைமை ஆசிரியை கனகவள்ளியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.