மகாராஷ்டிராவில் நிலவும் கடும் வெப்பம் மனிதர்களை மட்டுமல்லாமல், வனவிலங்குகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதற்குச் சான்றாக யவத்மால் மாவட்டத்தின் கந்தாலா காட் பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. புசத் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றை, தாகத்தால் அவதிப்பட்ட குரங்குகள் வழிமறித்து தண்ணீர் கேட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பேருந்தை வழிமறித்த குரங்கு நகர மறுத்ததைக் கண்டு, பயணிகள் அதன் தாகத்தை உணர்ந்து குடிநீர் வழங்கியுள்ளனர். அதனைக் குடித்ததும், அருகிலிருந்த காட்டில் இருந்து மேலும் பல குரங்குகளும் லங்கூர்களும் திரண்டு வந்து தண்ணீர் கேட்டுப் பெற்ற காட்சி பார்ப்பவர்களை உருக வைத்தது.

“>

தற்போது மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளதால், கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இந்தச் சூழலில் வனவிலங்குகள் தண்ணீர் இன்றி தவித்து வருவது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ, கடும் கோடைக் காலத்தில் வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. இயற்கைச் சூழலில் ஏற்படும் மாற்றங்களால் வனவிலங்குகள் சந்திக்கும் இந்தச் சிக்கல், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.