திருவண்ணாமலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 19.5 லட்ச ரூபாயும், போளூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 18 லட்ச ரூபாயும், தேனிமலை பகுதியில் உள்ள ஏடிஎம்மில் 38 லட்ச ரூபாயும், கலசபாக்கத்தில் உள்ள தனியார் ஏடிஎம்மில் 3 லட்ச ரூபாயும் கொள்ளை அடிக்கப்பட்டது. அதன்படி மொத்தமாக 72.5 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் 4 ஏடிஎம்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ஆந்திர மாநிலத்தின் பதிவெண் கொண்ட வாகனத்தில் மர்ம நபர்கள் ஏடிஎம்களில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அதாவது ஆந்திர பதிவெண் கொண்ட வாகனத்தில் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் நிலையில், கொள்ளையர்கள் ஆந்திராவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் ஆந்திர மாநிலத்தின் காவல் துறை உதவியை நாடியுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். அதோடு தமிழ்நாடு முழுவதும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்துமாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கொள்ளையர்கள் விடுதிகளில் ஏதேனும் தங்கியுள்ளனரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.