ஆஸ்திரியாவின் கோர்னியூபர்க் சிறையில் உள்ள 29 வயது கைதி ஒருவரைச் சுற்றி தற்போது சர்வதேச அளவில் விவாதம் வெடித்துள்ளது.

சுமார் 300 கிலோ எடை கொண்ட இந்த கைதி, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர். ஆரம்பத்தில் வியன்னாவில் உள்ள ஜோசப்ஸ்டாட் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, அதிக எடையால் சிறை படுக்கையே உடைந்துவிட்டதால், கோர்னியூபர்க் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இங்கு அவருக்கென சிறப்பு இரும்பு கட்டிலும், 24 மணி நேர செவிலியர் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த கைதியின் பராமரிப்புக்கு ஆஸ்திரிய அரசு நாளுக்கு €1,800 (ரூ.1.8 லட்சம்) செலவிடுவதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது ஒரு சாதாரண கைதிக்கு செலவாகும் தொகையை விட 10 மடங்கு அதிகம். அந்த அளவுக்கு ஏன் செலவழிக்கப்படுகிறது என்ற கேள்வி தற்போது ஆஸ்திரிய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், பலர் அரசு  மருத்துவமனைகளில் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை, ஆனால் குற்றவாளிக்கு அரசு நேரடி பராமரிப்பு வழங்குவதை ஏற்க முடியாமல் உள்ளனர்.

அதே நேரத்தில், இந்த கைதியின் வீட்டில் இருந்து 45 கிலோ கஞ்சா, 2 கிலோ கோகெயின், 2000 எக்ஸ்டசி மாத்திரைகள் என பரபரப்பான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய குற்றவாளிக்கு இப்படியொரு சுகாதார பராமரிப்பு அளிப்பது அரசாங்கத்தின் சீரற்ற முன்னுரிமைகளை காட்டுகிறது என பொதுமக்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம், சட்டம், மனித உரிமை, வரிசெலுத்துவோரின் பணம் ஆகிய விவகாரங்களில் புதிய அரசியல் சர்ச்சையையும் எழுப்பியுள்ளது.