கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனி அருகே சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இந்த ஓடையின் கரையோரம் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடி வீடுகள் இருந்தன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுரேஷ் வீட்டின் பின்பகுதியை 10 அடி தூரம் வரை இடித்து தர வேண்டும் என மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வீட்டின் பின்புறம் 10 அடி வரை இடித்து அகற்றப்பட்டது. ஆகையால் சுரேஷ் வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார். இருப்பினும் பொருட்கள் அந்த வீட்டிலேயே இருந்தது சுரேஷ் அப்போது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இதில் நள்ளிரவு நேரத்தில் அந்த 2 மாடி வீடு முழுவதுமாக சீட்டு கட்டு போல சரிந்து கீழே விழுந்தது. இதனையடுத்து அருகே இருந்த 2 வீடுகளும் இடிந்து விழுந்தன. இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக  வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டிற்குள் இருந்த டிவி, பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்தது. இந்நிலையில் 3 குடும்பத்தினருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்று வீடு வழங்கப்படும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.