கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் செல்போன் செயலின் மூலம் சுதாவுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தபால் மூலம் கூப்பன் வந்தது. இதனை நம்பிய சுதா தபாலில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது பிரேம் குமார், சுனில் குமார் என்று அறிமுகப்படுத்தி கொண்டு 2 பேர் சுதாவிடம் பேசி உள்ளனர். அவர்கள் பரிசு தொகையை பெறுவதற்கு வரி மற்றும் ரிசர்வ் வங்கியில் என்.ஓ.சி சான்றிதழ் பெற வேண்டும் என கூறியுள்ளனர். எனவே அதற்கு உரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்துமாறு சுதாவிடம் கூறினர்.

இதனை நம்பி சுதா பல்வேறு தவணைகளாக 3 லட்சத்து 79 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகும் அவர்கள் கூடுதலாக பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுதா கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடி செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் ஆன்லைன் மூலம் பணம் பரிசு விழுந்துள்ளது, அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி பணம் கேட்கும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.