சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் நாரவாரி குப்பம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். பிரபல ரவுடியான ராஜேஷுக்கு 3 மனைவிகள் இருப்பதாக தெரிகிறது. இதில் மூன்றாவது மனைவி தனது கணவர் ராஜேஷ் குடும்ப செலவுக்கு கூட பணம் கொடுக்க மறுப்பதாக சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜேஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

நேற்று மாலை குடிபோதையில் ராஜேஷ் பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே இருக்கும் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷை கீழே இறங்கி வருமாறு தெரிவித்தனர். ஆனால் அவர் கீழே இறங்கி வர மறுப்பு தெரிவித்தார். இதனால் தீயணைப்பு வீரர்கள் மின் கோபுரத்தில் ஏறி ராஜேஷை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.