நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆரிய நாட்டுத் தெருவில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவரான ஹரிஹர மாதவன்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தமிழக முழுவதும் 2200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து இலங்கை முழுவதும் தனது விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்த ஹரிஹர மாதவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனது பயணத்தை நேற்று தொடங்கினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் கொடி அசைத்து சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தனர். இதுகுறித்து மாதவன் கூறியதாவது, இந்த காலகட்டத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்துவிட்டது. சிறிது தூரம் செல்ல வேண்டும் என்றாலும் கார், மோட்டார் சைக்கிளை தான் உபயோகப்படுத்துகிறோம். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. புவியும் வெப்பமடைகிறது. எனவே பொதுமக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளேன் என கூறியுள்ளார்.