வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. உங்களது குழந்தைகளின் மேல் படிப்புக்கான மிகப் பெரிய செய்தியாக இது இருக்கும். நாட்டிலுள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் வெளிநாட்டினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள்(என்ஆர்ஐ) மற்றும் இந்திய வெளிநாட்டு குடிமக்கள்(ஓசிஐ) மாணவர்கள் இப்போது இளங்கலை(யுஜி) படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் (சியூஇடி) பங்குபெறலாம். இந்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) அறிவித்தது.

எனினும் CUET தேர்வை எழுதிய பிறகும் இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பல்கலையில் இடம் கிடைப்பது அந்தந்த கல்வி நிறுவனத்துக்கான சேர்க்கை கொள்கையை பொறுத்தது என யுஜிசி தெளிவுபடுத்தி உள்ளது. புது விதிகள் இருந்த போதிலும், வெளிநாட்டு பிரஜைகள் கட்டாய சியுஇடி தேவையில் இருந்து தொடர்ந்து விலக்கு அளிக்கப்படுவார்கள். ஏனென்றால் 25 சதவீத சூப்பர் நியூமரரி இடங்களில் சர்வதேச மாணவர்களை அனுமதிக்க பல்கலைக்கழகங்கள் தங்களது சொந்த நடைமுறையை வடிவமைக்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள், NRI, OCI மாணவர்கள் போன்றோரும் CUET(UG) 2023-க்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.