தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் ஊராட்சி சீதா லட்சுமிபுரம் மெயின் ரோட்டில் துப்புரவு தொழிலாளியான தேவிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு 15 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குவாரிக்கு மணல் ஏற்றுவதற்காக அதிவேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து தேவிகாவின் வீட்டிற்குள் புகுந்தது. இதனால் தேவிகாவின் குடிசை வீடு முழுவதும் சேதமானது.

இந்த விபத்தில் தேவிகா, லாரி டிரைவர் கோகுல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் தேவிகா வளர்த்த ஒரு ஆடும் உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேவிகாவையும் கோகுலையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.