சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வேலம்பட்டி மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பாரதி என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இங்கு ராஜம் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் திடீரென பள்ளியில் ஆய்வு நடத்திய போது தலைமை ஆசிரியை மற்றும் இடைநிலை ஆசிரியை இருவரும் பள்ளிக்கு வராமல் இருந்தது தெரியவந்தது.

அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் விசாரணை நடத்தியபோது, பாரதியும் ராஜமும் காலை 10:30 மணிக்கு பள்ளிக்கு வருவதும், மாலை 3 மணிக்கு வீட்டிற்கு செல்வதும் தெரியவந்தது. இவர்கள் தற்காலிக ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தனர். இதனால் பாரதி மற்றும் ராஜம் ஆகிய இருவரையும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.