இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் இரு வேறு சம்பவங்களில் 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு,  அவர்களது மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தன்னுடைய கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 15ஆம் தேதி சனிக்கிழமை நான்கு மீன் பிடி படகுகளில் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள்,  மற்றொரு சம்பவத்தில் வேறொரு பதிவு எண் கொண்ட விசைப்படகில் சென்ற நான்கு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு,  அவர்களுடைய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் சொல்லியுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியிருக்க கூடிய கடிதத்தில்,  தொடர்ச்சியாக இது போன்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டு,  அவர்களுடைய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்,  மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்கள் கைது செய்யப்படுவதால்,  மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும்,  முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த தொழிலை நம்பி உள்ள எண்ணற்ற குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லி உள்ள முதல்வர், உடனடியாக தூதராக அளவிலான நடவடிக்கை மேற்கொண்டு,  இலங்கை கட ற்படையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும்,  அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.